இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையை அடுத்து பல பகுதிகளில் கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக சுமார் 70 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வேலையின்மை மார்ச் மாதத்தில் 6.5 வீதத்திலிருந்து 7.97 வீதமாக அதிகரித்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு தரவுகள் கூறுகின்றன.
முடக்க நிலை காரணமாக புதிய வேலைவாய்ப்புக்கள் குறைந்து வருகின்றன. மே மாதத்தில் இந்த நிலை மேலும் மோசமாகி வேலையின்மை வீதம் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய் முதல் அலையின்போது மாதக் கணக்கில் நீடித்த கடுமையான சமூக முடக்கல் காரணமாக மில்லியன் கணக்கான இந்தியர்கள் வேலையிழந்தனர். அத்துடன், உள்நாட்டு உற்பத்தியும் மோசமாகப் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாவது அலையின்போது இறுதிக் கட்ட முயற்சியாகவே முடக்க நிலையை அமுல்செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மாநில அரசுகளைக் கோரி வருகிறார்.
எனினும் தொற்று நோயாளர் தொகை தீவிரமாக அதிகரிப்பதுடன், மரணங்களும் அதிகளவில் பதிவாகும் நிலையில் பல மாநிலங்கள் பகுதி அளவில் ஊரடங்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரஸின் எழுச்சி மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள முடக்க நிலையால் இந்திய உற்பத்தித் துறை பாதக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவானவர்கள் வேலை இழந்துள்ளதுடன், பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனவும் இந்திய பொருளாதார கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), இந்தியா